கேள்வி : தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி பீ.ஜே. தனது நூல்களையும் சி.டி.களையும் விற்கிறார். அதன் லாபத்தை ஜமாஅத்துக்குத் தராமல் அவரே எடுத்துக் கொள்கிறார் என்று தமுமுகவினர் சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.

அஷ்ஃபாக், தொண்டி

பதில் : என்னுடைய நூல்கள் எதையும் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி நான் விற்பதில்லை. என் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறேன். தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கம் இல்லாத காலகட்டத்திலும் நூல்களை எழுதியுள்ளேன். அப்போது தான் அதிக நூல்களை எழுதியுள்ளேன். கடந்த மூன்றாண்டுகளாக தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பு மற்றவர்களிடம் இருந்த போதும் நூல் எழுதி வெளியிட்டு உள்ளேன். என்னுடைய எழுத்தினை வாசிக்க ஆசைப்படும் சகோதரர்கள் என்னுடைய பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு அதை வாங்கிச் செல்கிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் இந்த நூலை வெளியிடுகிறது எனவே இதை வாங்குங்கள் என்று நான் கூறுவதில்லை. வாங்கும் மக்களும் அப்படிப் பார்ப்பதில்லை. நான் எந்த நூலுக்கும் யாருடைய மதிப்புரையையும் கூட வாங்குவதில்லை. இது தவ்ஹீத் ஜமாஅத்தின் அங்கீகாரம் பெற்றது எனவும் நான் எந்த நூலிலும் குறிப்பிடுவதும் இல்லை.

மேலும் சி.டி.யைப் பொறுத்தவரை நான் அந்த விற்பனையில் என்றும் இறங்கியதில்லை. என்னுடைய சிடிகளை யார் வேண்டுமானாலும் விற்கலாம் என்று பொது அனுமதி நீண்ட காலத்துக்கு முன்பே கொடுத்துள்ளேன். அதில் கிடைக்கும் ஆதாயம் அதை விற்பனை செய்தவர்களைச் சேருமே தவிர எனக்கு எதுவும் சேராது. அந்த வகையில் என்னுடைய சிடிகளை தவ்ஹீத் ஜமாஅத்தும் விற்பனை செய்வதால் அதன் லாபம் ஜமாஅத்துக்குக் கிடைக்கிறது. ஜமாஅத்தினால் எனக்கு ஆதாயம் எதுவும் இல்லை. இது குறித்து எனது இணையதளத்தில் மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளேன்.