கெட்ட இயக்கத்தினருடன் தொழில் கூட்டு வைக்கலாமா?
கேள்வி: ததஜ நிர்வாகிகள் மற்ற இயக்கத்தைச் சார்ந்தவர்களுடன் (உதாரணம்: அஹ்லே குரான், தமுமுக, ஜாக்) வியாபாரத்தில் கூட்டணி வைக்கலாமா?
- ஃபாரூக், பேட்மாநகரம், தூத்துக்குடி
இஸ்லாமியப் பார்வையில் ஒரு முஸ்லிம்., முஸ்லிம் அல்லாதவருடன் கூட கூட்டுச் சேர்ந்து வியாபாரம் செய்யலாம். ஆனால் நமக்கு எதிராகச் செயல்படுவோருடன் கூட்டுச் சேர அனுமதி இல்லை. இதைப் பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர் ஆன் 60:8,9
மற்றவர்களை நண்பர்களாக்குவதற்கான இலக்கணம் இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.
நமது கொள்கையில் இல்லாதவர்களையும், நமக்கு மாற்றமான கொள்கையில் இருப்பவர்களையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்ளலாம். அவர்களுடன் கூட்டுச் சேரலாம்.
ஆனால் நமது கொள்கையையும் நம்மையும் ஒழித்துக் கட்டுவது யாருக்குக் கொள்கையாக உள்ளதோ அவர்களுடன் நட்புக் கொள்ளவோ கூட்டுச் சேரவோ கூடாது என்பதை இவ்வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் நமது கொள்கைக்கு மாற்றமான கொள்கையைக் கொண்டவர்கள்தான். ஆனாலும் அவர்கள் அனைவரும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லர். அவர்களுடன் தாராளமாக நட்பும் கூட்டும் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் சங்பரிவார சிந்தனை உள்ளவர்கள் நமது கொள்கைக்கு மாற்றமாக இருப்பதுடன் நம்மை ஒழிப்பதைத் தங்கள் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். இவர்களுடன் நாம் நட்பு கொள்ளக் கூடாது.
அது போல் தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லாத முஸ்லிம் பொதுமக்கள் அனைவரும் நமது கொள்கைக்கு மாற்றமான கொள்கையில் தான் உள்ளனர். ஆனாலும் அவர்கள் தம்மளவில் அதைக் கடைப்பிடிப்பார்கள். நம்மை அழிப்பதற்கு முயல மாட்டாட்கள். அவர்களுடன் நட்பு பாராட்டலாம்.
ஆனால் சில இயக்கத்தினர், சில பிரமுகர்கள் நம்மை ஊர் விலக்கம் செய்தல், ஜனாஸாவை அடக்கம் செய்ய மறுத்தல், நம்முடைய பிரச்சாரங்களுக்கு எதிராக்க் கச்சை கட்டுதல், கூட்டங்களில் புகுந்து கலாட்டா செய்தல் என நமக்கு எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தை தடை செய்ய வேண்டும் என்று 19 இயக்கமாகத் திரண்டவர்கள் பொது மக்களைப் போன்றவர்கள் அல்லர். இவர்களுடன் நட்பு பாராட்டுவதை இவ்வசனம் அனுமதிக்கவில்லை.
இதனால் நன்மைக்கு பதிலாக தீமை தான் ஏற்படும். உங்களின் முதலீட்டை அவர்கள் சுருட்டிக் கொண்டு அதற்கு இயக்கத்தைப் பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
இதனால் தான் நம்முடைய கொள்கையை ஒழிப்பது யாருக்குக் கொள்கையாக உள்ளதோ அவர்களுடன் கூட்டு வைக்கக் கூடாது. குறிப்பாக நிர்வாகிகளாக உள்ளவர்கள் இது போன்ற உறவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறோம்.
நிர்வாகிகள் இது போன்ற உறவுகளை வைத்திருந்தால் அவர்கள் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இயக்கத்தின் செயல்பாடுகள் பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்கிறோம்.
இது போல் ஏற்கனவே கூட்டு வைத்துள்ளவர்கள் உடனடியாக அதில் இருந்து விடுபட முடியாது. யாருக்கும் நட்டம் இல்லாமல் சிக்கல் இல்லாமல் முறைப்படி அனைத்தையும் மாற்றுதல் போன்ற காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளதால் ஏற்கனவே கூட்டு வைத்தவர்கள் நிர்வாகத்தில் இருந்தால் அவர்களுக்கு இது குறித்து அறிவுரை மட்டும் வழங்குகிறோம்.
புதிதாக நிர்வாகிகள் தேர்வு நடக்கும் போது இது போல் இல்லாதவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.
உணர்வு 16:17
In : Q&A