கேள்வி: தாங்கள் தலைவராக இருக்கும் டி.என்.டி.ஜே. பல்வேறு காரணங்களால் பல லட்சங்கள் கடனில் இருப்பதால் தங்களின் மரணத்திற்குப் பின் உங்களிடம் விசாரிக்கப்படுமா?

- காவேரி நகர் முகம்மது யூனுஸ், குவைத்                                           

ஒரு அமைப்பின் கடன் அல்லது ஒரு அரசின் கடன் தனி நபரின் கடனாக ஆகாது. ஒரு அமைப்புக்காக அதன் தலைவர் கடன் வாங்கிய பின்னர் அவர் மரணித்து விட்டால் அடுத்து பொறுப்புக்கு வருபவர் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட அரசின் சார்பில் சில கடன்களை விட்டு விட்டுத் தான் சென்றுள்ளார்கள். அதை அடுத்த ஆட்சியாளர் அபூபக்கர் (ரலி) அவர்கள் அடைத்தார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்! என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள் என்றேன். அபூபக்கர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்த போது ஐநூறு நாணயங்கள் இருந்தன. இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக! என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2296

எனவே இப்போது உள்ள நிர்வாகிகள் மரணித்து விட்டால் அதை அடுத்த நிர்வாகிகள் பொறுப்பு ஏற்று நிறைவேற்றுவார்கள். 

மேலும் அமைப்புக்காக கடன் இருந்தாலும் கடனுக்கு மேல் பல மடங்கு சொத்துகளையும் ஜமாஅத்துக்காக வைத்துள்ளோம். கடனை நிறைவேற்ற முடியாத நிலையில் இருந்து கொண்டு நாம் கடன் வாங்கவில்லை. கடன் வாங்கி எந்தச் சிரமத்தையும் நாம் வைக்கவில்லை.

இப்போது கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டால் விற்று விட்டு கடனை அடைக்க ஜமாஅத்துக்கு சொத்துகள் உள்ளன. எனவே கடன் கொடுத்தவர்கள் நெருக்கினால் உடனே கொடுக்கும் நிலையில் தான் ஜமாஅத் இருக்கிறது.

ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தியோ பயன்படுத்தாமலோ எனக்குக் கடன் வாங்கி இருந்தால் தான் அல்லாஹ் என்னைக் கேள்வி கேட்பான். எனக்கு தனிப்பட்ட முறையில் அப்படி எந்தக் கடனும் இல்லை.
உணர்வு 16:17